கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சம்பிக்க

கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்சர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

கோட்டாபயவை பதவியிலிருந்து வெளியேற்ற சதி
கோட்டாபயவை பதவியில் இருந்து வெளியேற்ற எவரும் சதி செய்யவில்லை.ஏனெனில் சதி ஊடாகவே அவர் பதவிக்கு வந்தார். கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின் விநியோக துண்டிப்பு ஆகிய நெருக்கடிகளை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ச மக்களால் வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை.

கோவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

ஏனெனில், கோவிட் பெருந்தொற்று இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை விட பொருளாதார பின்னடைவில் இருந்த நாடுகள் கோவிட் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தன.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை
கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தோற்றுவித்தது.

கோவிட் தடுப்பூசிகள் கொள்வனவு தாமதப்படுத்தப்பட்டு தம்மிக்க பாணிக்கு முன்னுரிமை வழங்கியமை, கோவிட் மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்சர்கள் முயற்சிக்கின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்சர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே கடந்த காலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச புத்தகம் எழுதுவது பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார்.