சுனாமி நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு பேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,

இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராயா, நிர்வாகத்தினர், தமிழருவி சிவகுமாரன், பொதுஅமைப்புகள், பூந்தோட்டம் கிராமமக்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.