காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் -மட்டு. அரச அதிபர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என இன்று வியாழக்கிழமை (14) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரசேத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த டிசம்பர் 31 ஆம் தொடக்கம் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு நாளை 15 ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எழுமாறாக மேற்கொள்ளப்பட்டுவரும் அன்டிஜன் மற்றும் பிசி ஆர் பரிசோதனை பல இடங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படும் காரணமாக குறித்த பரிசோதனைகள் நிறைவு செய்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட முடக்கம் விலக்கிக் கொள்ளப்படும் என மாவட்ட செயலணி குழு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை (18) திகதி வரை 3 தினங்களுக்கு தொடர்ந்தும் முடக்கம் நீடிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால் தொற்று பரவும் நிலை குறைந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது. எனவே மேற்குறித்த கால எல்லைவரைக்கும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி சுகாதார வழிமுறைகளை பேணுமாறு அவர் தெரிவித்தார்.