தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கூறியது உண்மையில்லை; மாவை ஆவேசம்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தையும், தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளதாகவும், இது ஒரு கொலை அச்சுறுத்தல் எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அம்பாறை மாவட்டம் உஹனையில் கடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, ‘தம்பி பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயல்பட முடியும்’ என இறுமாப்புடன் கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சினால் நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் 2009 வரையில் போரின் காலத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை மட்டுமல்ல அதற்கு யார் பொறுப்பாக இருந்தார் என்பதும் இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டையும் நிறுவியுள்ளது.

அதற்கு அப்பால் ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல இலங்கை நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கும் இராணுவமயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும், இனப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேச மக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களையும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தையும், இனப் படுகொலை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ‘நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொன்றேன்’ என்றால் போர்முனையில் இருந்திருக்கிறேன் என்பது தானே அர்த்தப்படுகின்றது என சுட்டிக்காட்டிய மாவை, பிரபாகரனையும் இழுத்துச் சென்று சுட்டேன் என்றால் உயிருடன் நந்திக் கடல் போர்முனையில் பிடிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றிலல்லவா நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அல்லாமல் சுட்டுக் கொன்றேன் என்றால் அது போர்க்குற்றம் தானே. இப்படித்தான் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா? நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் அறிந்தவரையில் பிரபாகரன் களத்தில் போராடியிருப்பாரே தவிர சரணடைந்துவிடாத சுபாவம் கொண்டவர்.

அவரது மகன் பாலச்சந்திரன் அப் போர்க்களத்தின் நடுவே எவ்வளவு அப்பாவித்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதை உலகமே அறியும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூவான் வெலிசாயாவில் பதவி ஏற்பு நிகழ்வில் பதவி ஏற்றார்.

அச் செய்கையானது நாட்டை ஆண்ட எல்லாள மன்னனைத் துட்டகாமினி போரில் தோற்கடித்தான் என்பதை நினைவூட்டுகிறதாக குறிப்பிட்ட மாவை சேனாதிராசா, அது போல தான் பிரபாகரனை கொன்று வென்றென் என்று தானே கூறுகிறார்.

ஆனால் போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் (சமாதி) அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி.

துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன். வரலாறு கூறும், மகா வம்சத்தில் ‘சிங்கள’ என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறில்லாமல் ‘நந்திக்கடலில் போரில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன்’ என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, தமிழ்த் தேச மக்களை இழிவுபடுத்தி நாட்டின் தலைமைத்துவப் பண்புகளை இழந்து நாகரிகத்தை மண்ணில் புதைக்கலாமா?

இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே தான் என்றும் மாவை சேனாதிராசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.