ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டம் தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை தடுத்துப் பாதுகாக்கும் கவசமாக விளங்கியது என வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமக்கே உரித்தான தனித்துவமான மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என்பற்றுடன் தம்மைத் தாமே தனியரசாக ஆண்ட தமிழினம் 1505ஆம் ஆண்டில் இத்தீவில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களிடமும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களிடமும் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்ததுடன் 1796 இல் இலங்கைத் தீவில் காலடி வைத்த ஆங்கிலேயர்களிடம் கடைசித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடு ஒட்டுமொத்த தமிழ் இராட்சியங்களும் வீழ்ச்சியடைந்தது.
அதே போன்று தீவின் தென்பகுதியை ஆண்ட சிங்கள மன்னர்களும் தோற்கடிக்கப்பட்டு தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1833ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கைத் தனி நிர்வாகமாகவும், தென்பகுதியை வேறு நிர்வாகமாகவும் நிர்வகித்து வந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதி கருதி இலங்கைத்தீவு முழுவதையும் 1833ஆம் ஆண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
தமது நிர்வாக வசதிக்காக நாடு முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1948ஆம் ஆண்டு இத் தீவை விட்டு வெளியேறும் போது வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஆட்சியதிகாரத்தினை தமிழர்களிடம் கையளிக்காமல் தீவு முழுவதைனையும் ஆளும் அதிகாரத்தைப் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.
அதனால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் இறைமையை பெரும்பான்மையின சிங்களவர்களிடம் இழந்து அடிமைப்பட்டுக்கிடக்கின்றார்கள்.
தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியாளும் அதிகாரம் பிரித்தானியர்களது கைகளிலிருந்து பெரும்பான்மையினச் சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு உத்தியோகப்பூர்வமாக மாற்றப்பட்ட தினமே பெப்ரவரி 04 ஆகும்.
பிரித்தானியர்களுக்குப் பதிலாக அயல் இராட்சியத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களை அடக்கியாளும் காலணித்துவ ஆட்சி ஆரம்பமானது. இதனாலேயே இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரி நாளாகத் தமிழ் தலைவர்கள் பிரகடனப்படுத்தியதுடன், கடந்த ஏழு தசாப்தங்களாக சுதந்திர தினத்தைத் தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.
அதனை ஓர் போராட்டமாகவே தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் திருமலை நடராஜன் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை மதிக்காது தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கல், மொழியையும் கலாச்சாரத்தையும் அழித்தல், வரலாற்றை திரிவுபடுத்தி அழித்தல், பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தல், கல்வியை அழித்தல் போன்ற செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிங்கள தேசத்தின் அடையாளங்களுக்குள் தமிழ்த்தேசத்தின் அடையாளங்களைக் கரைத்து தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து எமது தாயகத்தில் எமது மக்களைச் சிறுபான்மையினமாக மாற்றி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கையேந்தி வாழும் நிலைக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளே கடந்த 72 வருடங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
இச் செயற்பாடுகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது.
அப்போராட்டம் தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை தடுத்துப் பாதுகாக்கும் கவசமாக விளங்கியது.
அந்த பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசத்தின் இருப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பிய வகையில் அழிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகளானது சுதந்திரதினத்தை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது மட்டுமல்ல அன்றைய தினம் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எதிர்ப்பு போராட்டம் நடாத்த வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது.
மேற்படி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராட வேண்டிய நிலையில்,இந்த அழிப்புச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி எமது மக்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தமிழ் மக்கள் நம்பியவர்களால் முன்னெடுக்கப்படுவதென்பது மிகவும் ஆபத்தானது.
இந்நிலையில் எமது நிலங்களையும், மொழி கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டும் என்ற அடிப்படையில் 04-02-2021 அன்று வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி காக்காகடை சந்தியில் இருந்து காலை 8-30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பழைய பஸ்தரிப்பிடத்தை சென்றடையும்.
கிழக்கு மாகாணத்தில் சம நேரத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.
எனவே இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், வர்த்தக சங்கங்கள் தமிழ்த்தேசிய கட்சிகள், பல்கலைக்கழக மாணவ சமூகங்கள் ஒன்றிணைந்து சிங்கள அடக்குமுறையாளர்களின் சுதந்திரதினத்தை கரிநாளாக்கி சர்வதேசத்திடம் நீதிகோர, பூரண ஆதரவு வழங்கி வடக்கு, கிழக்கு தழுவிய அறவழிப் போராட்டத்திற்கு அணி திரளுமாறு அன்பு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்