இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் – விசேட நிபுணர்கள் முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்திருக்கிறார்.

தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக நீதியை உத்தரவாதப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர் இரண்டு முக்கிய தெரிவுகளையும் முன்வைத்திருக்கிறார்.

முதலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவது, இரண்டாவது உறுப்பு நாடுகள் தமது பிராந்தியத்துக்கு வெளியிலான அல்லது உலகம் தழுவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமது தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும் வழக்குத் தொடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பரிந்துரைகள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சூழ் நிலையில் இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக சர்வதேச சமூகம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் முன்னாள் ஐக்கியநாடுகள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க சுதந்திர போராட்ட வீரர் ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மற்றும் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பாங்கி மூன் உள்ளிட்ட பலர் அடங்குவர், அவர்களுடன் முன்னாள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் உட்பட 20 முன்னாள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் நாடு முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உருவாகிவரும் போக்குகள் குறித்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட இந்த அறிக்கை நிலையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் மோதல்கள் இடம்பெறுதலை தடுப்பதற்கான முக்கியமான விடயமாக, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் அநீதிகளிற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கானஉறுதியான சர்வதேச நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுப்புநாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டு சர்வதேச நியாயாதிக்கத்தின் மூலம் நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமை ஆணையாளர் விடுத்த வேண்டுகோளை நாங்கள் எதிரொலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதை நிறுத்த மறுப்பதால் சர்வதேச நீதிமன்றம் போன்ற காணப்படுகின்ற சர்வதேச வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலிற்கான வழிவகைள் குறித்து ஆராயவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் ஐநாவின் முன்னாள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.