இலங்கையின் கழுத்து ஜெனிவாவில் நெரிக்கப்பட மஹிந்தவே காரணம் – எதிர்க்கட்சி

இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிய போது , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அவை தொடர்பில் விசாரிப்பதாக உறுதியளித்தார். அவர் வழங்கிய வாக்குறுதியே இன்று இலங்கையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.

 

எனவே தீவிரவாதத்தை ஒழித்து பெற்றுக் கொண்ட வெற்றியை முறையாக சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

சர்வதேசத்துடன் சுமூகமான உறவை பேணினால் மாத்திரமே அதனூடான நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பாராளுமன்ற விவாதங்களின் போதும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்.

சர்வதேசத்துடன் சுமூகமான தொடர்புகளை பேணினால் மாத்திரமே சர்வதேச நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பில் முதன் முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஐ.நா.விடம் உறுதியளித்தார்.

இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பாங் கீ மூன் நாட்டுக்கு வந்த போது தெரிவித்தார்.

இதன் போது மஹிந்த ராஜபக்ஷவே அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்பவே இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து , குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அதனை செய்யவில்லை. இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதியே இன்று இலங்கையின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே 2011 – 2014 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. பிரேரணைகளை முன்வைத்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே அன்று மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்குச் சென்றார்.

2015 இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் சர்வதேசத்தை பகைத்துக் கொள்ளாமல் சுமூகமான உறவைப் பேணினோம். எம்மால் செய்யக் கூடியவற்றையும் , செய்ய முடியாதவற்றையும் தெளிவுபடுத்தினோம். யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போது , நாம் அதற்கு இனக்கம் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு விசாரணைகளின் ஊடாக தீர்வைக் காண்பதாகக் கூறினோம். இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்த போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் தீவிரவாதத்தை ஒழித்து பெற்றுக் கொண்ட வெற்றியை முறையாக சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.