குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பு

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது-

இரண்டு சிறுவர்களுடன் இத்திகுளம் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச்சிறுவன் உடன்சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை தன்னுடைய மகனை முதலில் இழுத்துச் செல்வதை அவதரித்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முதல் காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் இன்று காலை கிராம மக்களின் உதவியுடன் முதலை கடித்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சடலத்தைப் பார்வையிடுவதற்காக தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.