தெற்கில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோவில்கள்! தொல்பொருளியல் திணைக்களப் பணிப்பாளர்

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுகள் மற்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளை கையாள்வதில் பாகுபாடு காண்பிக்கவில்லை. தெற்கினைப் போன்ற வடக்கு, கிழக்கினையும் அணுகின்றோம் என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

உருத்திரபுரம் சிவன் கோவில் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் தொல்பொருள் சான்றுகளைக் கண்டறிந்து பாதுகாப்பதற்காகவே அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதே தவிர, குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து எவ்விதமான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் அண்மைய நாட்களில் தொல்பொருளியல் அதிகாரிகள் கிளிநொச்சி உத்திரபுரம் சிவன் கோவில் மற்றும் நீர்வேலி நிலாவரைப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளைச் செய்வதற்கு முயற்சிகளை எடுத்திருந்த நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவமாகவே இந்த விடயத்தினை பார்ப்பதாக அந்த முயற்சிகளுக்கு எதிராக போராடிய மக்களும் அரசியல், சிவில் சமூகத் தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் தொல்பொருளியல் திணைக்களப்பணிப்பாளரிடத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது திணைக்களத்தின் பிரதான பணியாக இருப்பது இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதிகளை அடையாளம் கணலும் முறையாக பாதுகாத்தலும் ஆகும்.

அப்பகுதிகளிலிருந்து மீட்கப்படும் பொருட்களை பத்திரப்படுத்தி வரலாற்றுத் தொன்மங்களை அழிவுறாது பேணுவதே எமது கடமையாகின்றது. அந்தப் பணியையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதில் எவ்விதமான இன, மத ரீதியான பாகுபாட்டினைக் காண்பிக்கவில்லை.

தெற்கில் எவ்வாறு புராதனப் பகுதிகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோமோ அதேபோன்று தான் வடக்கிலும் சரி,கிழக்கிலும் சரி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் அங்குள்ள தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது அதற்காக விசேட நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிலபகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளும் உள்ளன. எவ்வாறாயினும் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தொல்பொருள்களும் இடங்களும் உரிய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது கரிசனை ஆகும்.

மேலும் கோவில்களில் தொல்பொருள்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு மதத்தினை இலக்குவைத்த நடவடிக்கை அல்ல. தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோவில்கள் உள்ளன.

ஆகவே அவ்விதமாக காணப்படுவதால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. எனவே தொல்பொருளியல் செயற்பாடு தொடர்பாக தவறான புரிதலை வடக்கு கிழக்கு சமூகத்தினர் விடுக்க வேண்டும் என்றார்.