தேங்காய் எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் வேண்டுகோள்

சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் நுகர்வோர் பாவனைக்கு  உகந்ததா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்விடயம் குறித்து சுகாதார  அமைச்சு துரிதகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களால் மரக்கறி எண்ணெய் கொள்வனவு செய்ய முடியாது என்று  நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும்  தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் பாவனை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து பாம் ஒய்ல் பாவனையை ஊக்குவிக்கும் முயற்சிகள் முன்னெக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யப்பட்டு அவை சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளன.

ஆனால் அவ்வாறானதொரு எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை என வர்த்தகத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். இவ்விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்கள் தேங்காய் எண்ணெய் அதிகளவில் உணவிற்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறான நிலையில் இதுபோன்ற பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளமை நுகர்வோர் மாத்திர் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான மக்களால் மரகறி எண்ணெய் கொள்வனவு செய்ய முடியாது. ஆகவே சந்தையில் உள்ள தேங்காய் எண்ணெய் தரமானதா, இல்லையா என்பது குறித்து  சுகாதார அமைச்சு விரைவாக அறிவிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் பாவனை உணவுற்கு பொருத்தமற்றது ,  உடல. ஆரோக்கியத்துக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் பாவனையை ஊக்குவிக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் குறித்து விரைவில் தெளிவுப்படுத்துவோம் என்றார்.