சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக முறையான அனுமதி அளிக்கப்படும் வரை, அத்தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு நேற்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
நோயாளர்களின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அதன் தலைவர் லூசியஷ் பெனடிக் , இணை செயலாளர் கிறிஷ்டின் பெரேரா ஆகியோரை மனுதாரர்களாக பெயரிட்டே இம்மனு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன , தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை, பேராசிரியர் அசித்த டி சில்வா,வைத்தியர் கமல் ஜயசிங்க,சஞ்ஞீவனி தயாரத்ன,வைத்தியர் அசேல குணவர்தன,வைத்தியர் நிஷங்க ஜயவர்தன,வைத்தியர் சனத் லெனேரோல்,வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம, வைத்தியர் பாலித அபேகோன், வைத்தியர் கபில ரணசிங்க, எம்.கே. எச் கருணாரத்ன. எச்.எம். சி ஹேரத், வைத்தியர் நிதுஷி சமரநாயக்க,வைத்தியர் ஏ.லக்குமார் பெர்னான்டோ,பேராசிரியர் சிசிர சிறிபத்தன,ராஜா குணரத்ன,வைத்தியர் ஆர்.ஐ. விஜயவந்த,பேராசிரியர் சுதீர ஜயசிங்க,செவ்வந்தி சுபசிங்க, டப்ள்யூ.எம். ஜி.எம். விஜயசூரிய, வைத்தியர் உதயசிறி காரியவசம்,சட்டமாதிபர் ஆகிய 24 பேர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதில் 11 முதல் 16 வரையிலான பிரதிவாதிகளான வைத்தியர் பாலித அபேகோன், வைத்தியர் கபில ரணசிங்க, எம்.கே. எச் கருணாரத்ன. எச்.எம். சி ஹேரத், வைத்தியர் நிதுஷி சமரநாயக்க,வைத்தியர் ஏ.லக்குமார் பெர்னான்டோ ஆகியோர் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களாவர்.
அத்துடன் 17 முதல் 23 வரையிலான பிரதிவாதிகளான பேராசிரியர் சிசிர சிறிபத்தன,ராஜா குணரத்ன,வைத்தியர் ஆர்.ஐ. விஜயவந்த,பேராசிரியர் சுதீர ஜயசிங்க,செவ்வந்தி சுபசிங்க, டப்ள்யூ.எம். ஜி.எம். விஜயசூரிய, வைத்தியர் உதயசிறி காரியவசம் ஆகியோர் உள் நோக்கத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், சீனாவின் குறித்த சினோ பார்ம் தடுப்பூசி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட முன்னர், அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் உள்ளடங்கிய உறுப்பினர்களை தன்னிச்சையாக நீக்கும் செயற்பாடு பொது மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அது அரசியல் அமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையை மீறும் செயல் எனவும் குறித்த மனு ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விபரங்களையும், அவர்கள் அத்தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தடுப்பூசியின் பாதுகாப்பு செயற் திறன்,தரம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் வரை அதனை இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படல் வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்பு வழங்கும் வரை அவ்வூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன உள்ளிட்டோர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.