நாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி – சஜித்

நாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி

நாட்டு பிரஜைகளை மூன்றாம் தரப்பினராக்கி , வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து இலங்கையை அடிமை தேசமாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது.

துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

இலங்கையில் அரசியலமைப்பை சிறிது சிறிதாக மீறி , மக்களின் இறையான்மையை சீரழித்து , நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும் தனித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டுமொரு பூகோள பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

இன்று ஞாயிறுக்கிழமை காணொளியொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

தற்போதைய அரசாங்கம் துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

இலங்கையின் 220 இலட்சம் பிரஜைகளையும் மூன்றாம் நிலை பிரஜைகளாக்கி வெளிநாட்டு பிரஜைகளுக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்கு அடிபணிந்து , அடிமைகளாகி, எமது தாய் நாட்டை அடிமை தேசமாக மாற்றுவதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற துறை முகநகர வேலைத்திட்டத்தை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

இது தொடர்பில் நீதிமன்றத்தினை நாடி இந்த வெறுக்கத்தக்க செயற்பாட்டை தோல்வியடைச் செய்வதற்காக செயற்படுவோம்.

இலங்கையில் அரசியலமைப்பை சிறிது சிறிதாக மீறி , மக்களின் இறையான்மையை சீரழித்து , நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும் தனித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டுமொரு பூகோள பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாட்டிற்கு அப்பாற்பட்ட பிரிதொரு பிரிவை உருவாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வேறு சட்டகட்டமைப்புக்களுக்கமைய இலங்கையை அடிமை நிலைக்கு தள்ளவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமெனில் , அதற்கான வழிமுறைகள் பல உள்ளன. நாட்டில் ஊழல் , மோசடி , கொள்ளை என்பவற்றை ஒழித்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்கி தொழிநுட்ப வணிக செயற்பாடுகளில் முன்னேற முயற்சிக்க வேண்டும். பொருளாதார ரீதியில் சகல மட்டத்திலுள்ளவர்களும் முன்னேறுவதற்கான வேலைத்திட்டமே தற்போது அவசியமாகும்.

ஒரே நாடு , ஒரே சட்டம் கூறிய மக்கள் ஆணையைக் கோரினர். ஆனால் தற்போது இரு நாடாக்கப்பட்டு சட்டங்களும் இரண்டாக்கப்பட்டுள்ளன.

நீதித்துறையை புறக்கணித்து , அரசியலமைப்பை சிறிதளவிலும் கவனத்தில் கொள்ளாமல் இலங்கையை முழுமையாக அடிமை தேசமாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தோல்வியடைச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும்.

நிதி , பொருளாதார பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் தோல்வியடைச் செய்து , பொருளாதாரத்தை இல்லாதொழிப்பவர்களை மக்களின் முன்னிறுத்தி , மக்களின் ஆசியுடன் இந்த அரசாங்கத்தை தோற்கடித்து இலங்கையை வெற்றிமிக்க நாடாக்குவோம்.

சகல முற்போக்கு சக்திகளுக்கும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகம் மிக்க யுகத்தை நாம் உருவாக்க எம்முடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.