திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி-மன்னாரில் சம்பவம்!

மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனினும் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி, முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

அவர், தமது வீட்டுக்கு அருகாமையில் செல்லும் போது முச்சக்கர வண்டியின் கீழ் பகுதியில் இருந்து புகை வெளிவந்துள்ளதோடு முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

உடனடியாக குறித்த நபர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்துள்ளார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளது.