வவுனியா – தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தாண்டிக்குளம் பகுதியில் கடந்த வாரம் கண்டி வீதி புகையிரத வீதிக்கரையில் சட்டவிரோதமாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிராக வவுனியா பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன .
இந்நிலையில் அப்பகுதியில் தாண்டிக்குளம் கிராம அலுவலகரும் தனது கடமைகளைப் பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார் .
இதனை அவதானித்த சட்டவிரோதமாக விற்பனை நிலையம் அமைத்த நபர் ஒருவர் குறித்த கிராம அலுவலகரை மகாறம்பைக்குளம் பகுதியில் கடந்த வாரம் வழிமறித்து வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
உடனடியாக தாக்குதலுக்குள்ளாகிய கிராம அலுவலகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டுள்ளார்.
சந்தேகநபர் தலைமறைவாகியதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டுள்ளார்.
கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் கடந்த காலங்களில் கொக்குவெளியில் பொதுமக்களின் காணிகளைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளதுடன், பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுப் பல தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு தண்டனைகள் அனுபவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .