தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம்

மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டன்டெனொங்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்குவயது மகன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ள நிரந்தர பாதுகாப்பை கோரும் தமி;ழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ணப்பங்களை வேண்டுமென்றே பரிசீலிப்பதை உள்துறை அமைச்சு வேண்டுமென்றே தாமதித்துள்ளது,அவர்கள் குடிவரவு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ள போதிலும் ஆவணங்களை ஆராய்வது தாமதமாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நிரந்தரமான வதிவிடமொன்றை கண்டுபிடிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர்,தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தப்பி 2012 இல் அவுஸ்திரேலிய சென்ற அவர்களை அதிகாரிகள் முதலில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைத்திருந்த பின்னரே அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதித்தனர்.
அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் தங்கிஉள்ளனர்.
பொருளாதார பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காக அவர்கள் சிட்னி அடிலெய்ட் பேர்த் உட்பட பல நகரங்களில் வசித்த பின்னர் ஒரு மாதத்திற்கு முன்னரே மெல்பேர்னில் குடியேறினார்கள்.

கிறிஸ்தநீதன் குடும்பத்தின் நிரந்தர பாதுகாப்பிற்கான கோரிக்கை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.அது பிள்ளைகளிற்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாத பரிதாப நிலையை பெற்றோருக்கு ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
ரீத்திசிற்கு இடம்பெற்றது மிகவும் துன்பகரமான விடயம்,அவுஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்திற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அரன்மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.