தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 48 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 52 277 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இதுவரையில் 48 000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவர்களுக்கு பொலிஸாரால் அறிவிக்கப்படும் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 3196 வாகனங்களில் பயணித்த 7731 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

 

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 100 வாகனங்களில் பயணித்த 232 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ளதால் சகலருக்கும் ஒரு மாகாணத்திலிருந்து பிரிதொரு மாகாணத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனினும் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது அவசர தேவைக்காக உரிய ஆவணங்களுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமலும் , முகக் கவசத்தை முறையாக அணியாமலும் பலர் நடமாடுகின்றமை தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன  என்றும்  பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.