கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் – உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம்

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருக்கின்றார். அந்த 11 பேரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணிக்கவில்லை.

மாறாக கப்பம்பெறும் நோக்கில் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ,  ராஜபக்ஷவின் பிள்ளைகள் வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பவில்லையெனின் அவர்களது உணர்வு எத்தகையதாக இருக்கும்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம்பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவ்விவகாரம் தொடர்பில் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை.

மேற்படி 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளடங்கலாக கடற்படை அதிகாரிகள் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் முன்னாள் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் அதற்கு மாறாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு எதிராக காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தமக்கான நீதியை வழங்குமாறுகோரி காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான நீதியை நிலைநாட்டுமாறுகோரி மேற்படி அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவின் குற்றப்பத்திரிகையை வாபஸ்வாங்கிய சட்டமா அதிபரின் கேவலமான செயலைக் கண்டிக்கின்றோம்’, ’11 பேர் கடத்தப்பட்ட வழக்கு – சட்டமா அதிபரின் காட்டிக்கொடுப்பைத் தோற்கடிப்பதற்கு நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்’, ‘சட்டம் இல்லாத இடத்திற்கு எதற்கு சட்டமா அதிபர்?’, ‘சட்டமா அதிபர் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரா? அல்லது குற்றவாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரா?’, ‘உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துங்கள்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறியதாவது:

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருக்கின்றார். அதற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாம் மேன்முறையீடு செய்திருந்தோம்.

இருப்பினும் சட்டமா அதிபர் அவரது தீர்மானத்தை செயற்படுத்தமுடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மாத்திரமே எம்மால் முடியும்.

ஆனால் சட்டமா அதிபரின் செயற்பாடு நியாயமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணிக்கவில்லை.

மாறாகக் கப்பம்பெறும் நோக்கில் அவர்கள் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் பிள்ளைகள் வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பவில்லையெனின் அவர்களது உணர்வு எத்தகையதாக இருக்கும்? அவர்களுக்கு அத்தகைய துன்பம் ஏற்படவேண்டும் என்று நாம் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரின் வேதனையைப் புரிந்துகொள்வதுடன் அவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

அதேவேளை கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட பதினொருபேரில் ஒருவரான ரஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜினி நாகநாதன் கூறுகையில், ‘உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு மருத்துவத்துறையில் உயர்கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் செல்வதற்கு எதிர்பார்த்திருந்த எனது மகன் கடத்தப்பட்டு 13 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றது.

எனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காக 13 வருடங்களாகத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றபோதிலும், இன்னமும் நீதி வழங்கப்படவில்லை.

எனக்கு எந்தவொரு இழப்பீடும் தேவையில்லை. மாறாக எனது மகனை மீட்டுத்தாருங்கள்’ என்று கண்ணீருடன் உருக்கமாகக் கோரினார்.