இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வுகாண- சர்வதேச நாணய நிதியம் பேச்சு

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு உரிய காலத்தில் சரியான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கை அவசியமான உதவிகளை வழங்குதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இம்மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதிவரை இலங்கையுடனான தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும், அதன்மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தயாரான நிலையில் இருக்கமுடியும் என்றும் ஏற்கனவே சர்வதேச நாணயம் அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே கெரி ரைஸ் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இப்போது நிகழ்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் அது எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தொடரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், எனவே இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக உதவிகளை வழங்க எப்போதும் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மிகமோசமான நிதிநெருக்கடிக்களுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளை உரிய காலப்பகுதியில் அடையாளம்காணும் வகையிலான கண்காணிப்புப்பொறிமுறை ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், நுண்பாகப்பொருளாதார முறைமை மற்றும் முன்னுரிமைக்குரிய கொள்கைகள் என்பன தொடர்பில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் பேச்சாளர் கெரி ரைஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.