எம் இனத்தை ஒருபோதும் சிங்கள தேசத்தால் அழிக்க முடியாது – சபையில் சாணக்கியன் பகிரங்க விவாதம்

எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர்.

நான் தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்களை பெற்றுக் கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்துள்ள அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை பொலிஸார் கைசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும் செயலாகும்.

இவர்களை கைது செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை கைது செய்து சிறையிலடையுங்கள்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். அரசாங்கம் ஏனைய விடயங்களை மறைப்பதற்ககாக இவ்வாறு அப்பாவி இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்த்தீகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்தீகை விளக்கேற்ற தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்கினை ஏற்றுவதற்காக சிறிய அலங்காரங்களை செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றிய போது – சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட முடிந்ததாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சனைகளை உருவாக்குகின்றீர்கள்.