நீதியரசர்கள் ஓய்வு வயது குறித்து நீதி அமைச்சர் விளக்கம்

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
“அமைச்சரவையில் இது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. எனவே, அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை” எனத் தெரிவித்தார்.
அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கலாநிதி விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையை மீறும் செயல் எனத் தெரிவித்திருந்தனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டிற்கு இது முரணானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இலங்கை அரசியலமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் கீழ், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலம் மற்றும் சுதந்திரம் தொடர்பான பாதுகாப்புகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.




