மின்சார நுகர்வோர் சங்கம் விடுத்த கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, 24 மணிநேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளித்தே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே, தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியாவிட்டால், அதிகரிக்கப்பட்ட கட்டணங்களை மீண்டும் திருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
திங்கட்கிழமை ஏற்பட்ட மின்வெட்டானது சாதாரண தொழில்நுட்பக் கோளாறு அல்ல எனத் தெரிவித்த அவர், இவ்வாறான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டமிட்டிருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டினார்.
திவுலபிட்டிய, கட்டுநாயக்க, கட்டான, அத்துருகிரிய மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனை சேவைகள், மாணவர்களின் கல்வி மற்றும் சுயதொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.




