அதிக பஸ் கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் கூறினார்.
அந்தப் பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




