கிரகரி ஏரி படகு விபத்து – புதிய கட்டுப்பாடுகள் அமுல்

நுவரெலியா கிரகரி ஏரியில் நேற்று (19) சுற்றுலாப் பயணிகள் பயணித்த இரண்டு படகுகள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, படகுச் சேவையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு இன்று (20) முதல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார்.
கிரகரி ஏரியில் சுமார் 120 சுற்றுலாப் படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. விபத்தை அடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு கவசங்களை அணிவதை உறுதிப்படுத்தல், படகுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழுக்கமான முறையில் படகுச் சவாரிகளை முன்னெடுத்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை இரண்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஒன்றின் மீது, வேகமாக வந்த மற்றொரு படகு மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், படகிலிருந்த இரு பயணிகள் மற்றும் ஓட்டுநர் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு படகு ஓட்டுநர்களும் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது சுற்றுலாப் பயணிகளின் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஏரிக்குள் விழுந்து காணாமல் போயுள்ளன. இதற்கான நஷ்டஈட்டுத் தொகையை படகு உரிமையாளர்கள் அந்தப் பயணிகளுக்கு வழங்கியுள்ளனர்.
நுவரெலியா வசந்த கால விழாவையொட்டி கடந்த சில நாட்களில் சுமார் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளதாக மாநகர முதல்வர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.




