“Green Channel” வழியாக ரூ.43.89 மில்லியன் ‘குஷ்’ போதைப்பொருள் கடத்தல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், எதையும் அறிவிக்கத் தேவையில்லாத “பசுமை வழித்தடம்” (Green Channel) வழியாக ரூ.43.89 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, பின்னர் நாட்டிலிருந்து வெளியேற்ற முயன்றதாகக் கூறப்படும் வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
அவர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் TG-307 என்ற விமானம் மூலம் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபர் எடுத்துவந்திருந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோகிராம் 389 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை நான்கு தனித்தனி பொட்டலங்களாகப் பிரித்து மறைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ரூ.43.89 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




