7 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்கள் கொள்ளை: சந்தேகநபர் கைது!

இரத்தினபுரி, ஹிதெல்லன பகுதியில் மணிக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்ட சுமார் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்க கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த வர்த்தகரின் தாய் மற்றும் சகோதரியைக் கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது 7 கோடி ரூபா பெறுமதியான மணிக்க கற்கள், 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் (195,000) ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகக் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த இரத்தினபுரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், எம்பிலிப்பிட்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் 52,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




