தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் தோட்டத்தின் மேற்பகுதியில் இன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பெண்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட மருத்துவ அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்ததாவது, காயமடைந்த அனைவரும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகும்.
தோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது பருந்தொன்று தாக்குதல் நடத்தியதையடுத்து, அதனால் ஆத்திரமடைந்த குளவிகள் அருகில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காயமடைந்த பெண்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




