ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஒரு வீட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டிருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் இருவரும் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் முன்னதாகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், நீண்ட காலமாக இப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கையின் போது 30 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் சில கைத்தொலைபேசிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.




