அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸா வியட்நாம் தூதருடன் சந்திப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரிங் தி தாம் (Trinh Thi Tam), சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேற்று (24) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், வியட்நாமின் ஒத்துழைப்புடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
சந்திப்பில், நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய நிலை, மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரண தேவைகள், விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகள், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஊடகத் துறை, தொடர்பாடல் துறைகளில் வியட்நாமின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்வது தொடர்பாகவும் தூதுவர் கருத்து தெரிவித்தார்.
தூதுவர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் அபிவிருத்தி இலக்குகளைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்குமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, இலங்கை தற்போது அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க், வியட்நாம் தூதரகத்தின் பிரதித் தூதுவர் லீ வேன் ஹோங் (Le Van Huong), தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




