முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அவர்களது உறவுகளினால் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் 1990 ஆம் ஆண்டு விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 12 பொது மக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இன்றைய தினம் ஒட்டுசுட்டானில் நினைவுகூரப்பட்டது.
நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது, ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த படுகொலைச் சம்பவத்தின் போது தந்தையையும், சகோதரரையும் இழந்த கண்ணன் என்பவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மரணித்தவர்களின், உறவினர்கள் மற்றும் பொது மக்களினால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.