“ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறாரா ஜனாதிபதி? – நாமல் எழுப்பிய கேள்வி”

நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரானால், அல்லது இதனை ஒரு ஊழலாக அவர் பார்க்கவில்லை என்றால், இந்த நிலக்கரி ஊழலில் ஜனாதிபதிக்கும் தொடர்பு உள்ளது என்றே அர்த்தம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம்.
ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றும், அவரது நடத்தைகளும் மற்றும் ஊழல்வாதிகளைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்க்கும் போது, இந்த நிலக்கரி ஊழலுக்குப் பின்னால் ஜனாதிபதியே இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஏனெனில், தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர், ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவராலேயே அமைச்சிற்கு அழைத்து வரப்பட்டவராவார். அந்த நபர் மீது ஏற்கனவே ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதேபோன்றதொரு ஊழலே இப்போதும் நிலக்கரி விநியோகத்தில் இடம்பெற்றுள்ளது. பழைய ஊழல்களுக்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒருவரை, மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கி, அவர் கொண்டு வந்த தரமற்ற நிலக்கரியைப் பாதுகாப்பாரானால், இது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நேரடித் தலையீட்டுடன் நடக்கும் ஊழலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




