‘படுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

அஜர்பைஜானில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் புது தில்லி வழியாக நாடுகடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் “பதுவத்த சமரா” நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
ராகம, பதுவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், நீண்டகாலமாக துபாயில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், பின்னர் அஜர்பைஜானுக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அஜர்பைஜானில் கைது செய்யப்பட்ட அவர், அங்கிருந்து இந்தியாவின் புது தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, நேற்று (10) இரவு 10.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-196 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
துசித ஹல்லோலுவ மீதான தாக்குதல் சம்பவம், கணேமுல்ல சஞ்சீவ கொலைக்காக ஆயுதங்களை வழங்கியமை, மேலும் நாட்டில் இடம்பெற்ற பல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராக பதுவத்த சமரா அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரை, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.




