வெயிலால் தவித்த பயணிகளுக்கு ஆறுதல்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பத்திலிருந்து பயணிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், திருநெல்வேலி சந்தியில் தற்காலிக நிழற்குடை அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்களால் இந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகின்றது.
குறிப்பாக, திருநெல்வேலி சந்திப்பில் சமிக்ஞை விளக்குகளுக்காகக் காத்திருக்கும் வாகன சாரதிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பயணிகள் கடும் வெப்பத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதனைக்கருத்திற் கொண்டு, நேற்றிரவு (16) சணல் பைகள் (Sackcloth) கொண்டு இந்தத் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிழற்குடையைப் பயணிகள் இன்று (17) காலை முதல் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறமாக மாறும் போது, நிழலில் நின்று செல்வது பயணிகளுக்குப் பெரும் ஆறுதலை அளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த உடனடி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை குறித்த புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து, குறைந்த செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகின்றது.




