கல்வி அமைச்சர் ஹரிணிக்கு இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதம்

கிண்ணியா உப்பாறு UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்றாமல், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட UNIVOTEC நிறுவனத்தையே அங்கு நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு இம்ரான் எம்.பி எழுதியுள்ள கடிதத்திலயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடத்துள்ளதாவது,
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியின் மூலம், மாகாண மட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ், மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாகாண அபிவிருத்தி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு UNIVOTEC கல்வி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது நல்லாட்சி அரசின் முன்னாள் நிதி அமைச்சர் திரு. மங்கள சமரவீர அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அந்த நிறுவனத்தை நிறுவும் நோக்கில் முதல் கட்டத்தை ஆரம்பிக்க ரூ. 50 மில்லியயை ஒதுக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தை நிறுவுவதற்காக கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சுமார் 12 ஏக்கர் / 4.856 ஹெக்டேர்) ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நிர்வாகக் கட்டிடங்களும் கட்டப்பட்டிருந்தன.
அதன்பின் அரசியல் அதிகார மாற்றத்துடன் அந்தப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் வந்த அரசுகளின் அமைச்சர்களிடமும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், குறிப்பிடத்தக்க பதில் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் கடந்த வாரம் இந்த பல்கலைகழக கல்லூரிக்கு ஒத்துக்கப்பட்ட காணியை வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு , சுற்றுலாதுறை அமைச்சுக்கு கையளிக்க அமைச்சரவை பத்திரம் உங்களால் சமர்பிக்கப்பட்டிருந்தது
ஆனால், மேற்கூறிய காணியில் பல்கலைகழக கல்லூரியையும், அதனுடன் இணைந்த VTA, NAITA போன்ற பிற பயிற்சி நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொழில்முறை கல்வி மையமாக (Vocational Educational Hub) உருவாக்கலாம். இதில் சுற்றுலா பயிற்சியும் உட்பட பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
இத்தகைய அமைப்பு, சம்பந்தப்பட்ட பிரதேச இளைஞர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை முழுவதிலுள்ள இளைஞர்களுக்கும் பல்வேறு முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும், அந்தப் பகுதியில் சுற்றுலா பயிற்சி திட்டத்திற்காக பல மாற்று நிலங்கள் உள்ளன. அந்த காணிகளை சுற்றுலா திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்
எனவே, எந்தவொரு இறுதி தீர்மானமும் எடுக்கப்படும் முன், இந்த விடயம் தொடர்பாக ஆழமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.எமது நாட்டின் தொழில்முறை கல்வி வளர்ச்சிக்காக, இந்த விடயத்தில் உங்கள் மாண்புமிகு கவனத்தையும் கருணையுடனான பரிசீலனையையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.




