மின்கட்டண உயர்வு : பொருளாதார பின்னடைவு ஏற்படும் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் ‘பவர் வீலிங்’ எனப்படும் மின்சார விநியோக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாமல், ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மீது மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வைத் திணிப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குறைந்த மழைவீழ்ச்சி, நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் செயலிழப்பு மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடுகட்ட, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் விசேட கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில், சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,
அரசாங்கம் 95 சதவீதமான சிறிய நுகர்வோருக்கு மானியம் வழங்கியுள்ள நிலையில், 38 பில்லியன் ரூபாய் நட்டத்தில் சுமார் 23 பில்லியன் ரூபாயை தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களே சுமக்க வேண்டியுள்ளது.
அத்துடன், இந்தியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் எமது ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்து, கேள்வி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகள் நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்களிடம் மின்சாரத்தைப் பெற்று, தேசிய மின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. ஆனால், இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.




