“3 அமைச்சர்களைக் கொண்டு கழுவினாலும் துடைக்க முடியாது!

“3 அமைச்சர்களைக் கொண்டு கழுவினாலும் துடைக்க முடியாது எனவும் நிலக்கரி மோசடியின் நட்டத்தை கோடீஸ்வர அமைச்சர்களிடமிருந்தும் JVP கட்சி நிதியிலிருந்தும் அறவிட வேண்டும்” ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்
நிலக்கரி மோசடி மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதால், நிலக்கரி மோசடியினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அவர்களிடமிருந்தோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியிலிருந்தோ மீளப் பெறுவதற்கான முறையொன்றை வகுக்க வேண்டும்
நிலக்கரி மோசடியினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை என அரசாங்கம் கூறிவந்த போதிலும், பல்வேறு வழிகளில் அந்த நஷ்டத்தை மக்களிடமிருந்து வசூலிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது
நிலக்கரி மோசடியால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சி சுட்டிக்காட்டிய போதிலும், அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல், எதிர்க்கட்சியினர் மீது சேறு பூசி அரசாங்கம் மிகவும் ஆணவத்துடன் செயற்பட்டது.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து நிலக்கரி மோசடி குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தாலும், அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
இம்மூன்று அமைச்சர்களும் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தியமையானது, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாரிய வீழ்ச்சியையே காட்டுகிறது.
அரசாங்கம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், இனிவரும் காலங்களில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ ஊடக சந்திப்புகளை நடத்தினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.




