இலங்கை அரச துறையில் தொலைதூரப் பணி விரிவாக்கம் – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் ‘தொலைதூரப் பணி’ (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




