டெங்கு நோய் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட அவசர அறிவிப்பு!

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு தொற்றினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷீலா சமரவீர இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில், நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




