பல மணிநேர பதற்றம்: நடுக்கடலில் சிக்கிய பயணிகள் கப்பல்!

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல், நேற்று இரவு கடலில் பல மணிநேரம் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல், வழக்கமாக நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டிய நிலையில், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 10.45 மணியளவிலேயே கரையை சென்றடைந்தது.
நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கல்லார் பகுதிக்கு அருகே வந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த நேரத்தில் கப்பலில் 144 பயணிகள் இருந்ததாகவும், தகவல் அறிந்த இந்திய அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கடலில் தத்தளித்த கப்பல் மெதுவாக இழுத்து வரப்பட்டு பாதுகாப்பாக துறைமுகத்தை சென்றடைந்தது.
கப்பலில் இருந்த அனைத்து பயணிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




