ஈரான் போர்நிறுத்தம் – லெபனானில் தாக்குதல் தொடரும்

போர் நிறுத்தத்தில் லெபனானை உள்ளடக்கவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் ஆதரவு வழங்கியுள்ளது . எனினும் இந்த போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்பட்ட இந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதன்படி, அடுத்த 14 நாட்களுக்கு ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக, சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு முக்கியத்துவமிக்க ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) பாதுகாப்பான முறையில் திறந்துவிட ஈரான் இணங்கியுள்ளது.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் ஆதரித்தாலும், இது லெபனானில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்காது என பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது.லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடரும்.
இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்காக லெபனான் எல்லையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது.இஸ்ரேலிய ஊடகமான ‘இஸ்ரேல் ஹயோம்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானுடன் இணக்கம் ஏற்பட்டாலும், லெபனான் முன்னணியில் இஸ்ரேல் தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும் என்பதை நெதன்யாகு அமெரிக்க அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.




