குவைத் மீது ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல்

குவைத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து ஈரானிய ஆளில்லா வானூர்திகள் (Drones) தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜோஹர் ஹயாத் இது குறித்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் இரண்டு பிரதான மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த “குற்றவியல் தாக்குதல்” காரணமாக ஆலைகளுக்குக் கடுமையான பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு மின் உற்பத்தி அலகுகள் முற்றாகச் செயலிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவைத்தின் முக்கிய பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து அண்மைக்காலமாக இவ்வாறான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் காரணமாக, ஷுவைக் எண்ணெய் துறை வளாகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருந்ததுடன், அரச அலுவலக வளாகம் ஒன்றிற்கும் கணிசமான சேதங்கள் விளைவிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தாக்குதல்கள் பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிப்பது குறித்து குவைத் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.




