கொஹுவலா கொலைச் சம்பவம்: தேடப்பட்டு வந்த சீன இளைஞன் கைது!

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொஹுவலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்த சீனப் பெண் ஒருவர், தனது அறைக்குள்ளேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இக்கொலை தொடர்பில் சந்தேகி நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று கொம்பனித்தெரு, ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த 26 வயதுடைய சீன இளைஞனை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து மூன்று நவீன கமராக்கள் * 280 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (06) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து கொஹுவலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




