‘பசுமை வழி’யில் சிக்கிய 512,000 ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 512,000 ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கைப் பயணி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டகொட்டே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இந்த நபர், தனியார் நிறுவனமொன்றில் நிதி மேலாளராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், கடந்த 08ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்ஏசியா விமான சேவையின் FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அறிவிப்பு தேவையில்லாத ‘பசுமை வழி’ ஊடாக வெளியேற முயன்ற போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிக்கியுள்ளார்.
அவரது கைப்பெட்டியில் இருந்த ‘துணை உணவு’ அடங்கிய இரண்டு புட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 512,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




