புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவைகள் வியாழக்கிழமை முதல் ஆரம்பம்

எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், புத்தாண்டு காலப்பகுதிக்காக சுமார் 1500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.தொடருந்து திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.




