ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு

ரஷ்ய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதால், ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஒப்பந்தங்களின் கீழ் சலுகை விலையில் ரஷ்ய எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர் நாட்டிற்கு கச்சா எண்ணெயை ஏற்றி வந்த முதலாவது கப்பல் நேற்று (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ‘தேஷ் மகிமா’ (Desh Mahima) என பெயரிடப்பட்ட இக்கப்பல் இந்திய கப்பல் கழகத்திற்குச் (Shipping Corporation of India) சொந்தமானதாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகை தந்த இக்கப்பல், 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் கையிருப்பு சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ள மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் நேற்று முன்தினம் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




