மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட தாழ்தள (Low-floor) முன்னுரிமை பஸ் சேவை இன்று (21) முதல் மாகும்புர பல்துறை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் 430 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக 10 குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறும் வசதி மற்றும் விசேட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த பஸ்களில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும்.
இந்த பஸ்கள் மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரை இயக்கப்படவுள்ளதுடன், மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்து சேவை அமையவுள்ளது.




