இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் ‘பிஷிங்’ வகை நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் பொதுமக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
உங்களுக்கு வந்துள்ள ஒரு பொதியைப் பெற்றுக்கொள்வதற்கு சிறிய அளவிலான கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் என அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
திணைக்களத்தின் இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி இணையதள முகவரி அதில் வழங்கப்பட்டிருக்கும்.
அந்த இணைப்பை அழுத்தி உள்ளே செல்பவர்களிடம் அவர்களின் வங்கி அட்டைகளின் விபரங்கள் கோரப்படுகின்றன. அந்தத் தகவல்களைப் பதிவிட்டவுடன், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடியாகப் பணம் திருடப்படுகிறது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அண்மைக்காலமாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




