தாய் கிழவி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்

தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமாகும் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “தாய் கிழவி”.
ராதிகாவின் வித்தியாசமான மற்றும் அசத்தலான தோற்றத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்த கதையம்சத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கதையின் முழு மையமும் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது.
இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பேசிய ராதிகா சரத்குமார், “இந்தக் கதை முதலில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அந்த வகை வேஷத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்பதால், கதையை பெண் மையமாக மாற்றி என்னை தேர்வு செய்தார்கள்,” என்று சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.




