சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியின் விலை கணிசமாக சரிவு!

கொழும்பு – புறக்கோட்டை மொத்தச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி வகைகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விடயங்களை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இதுவரை சுமார் 27,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்தத் தொடர்ச்சியான இறக்குமதி சந்தையில் நிலவிய தட்டுப்பாட்டை நீக்கி, விலை குறைப்பிற்கு வழிவகுத்துள்ளது.
இறக்குமதிக்கு முன்னரான விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது கணிசமான அளவு விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பு ஒரு கிலோ 280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி தற்போது ரூ. 225 – ரூ. 235 என்ற எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்பு ஒரு கிலோ 325 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி தற்போது ரூ. 240 – ரூ. 255 என்ற எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.




