‘டித்வா’ பாதிப்பு: பதுளையில் மீட்பு பணிகளுக்கான விசேட கலந்துரையாடல்!

டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக (13) பிற்பகல் ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மீள்குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அறிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு அப்பால் சென்று, வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு புதிய வீட்டின் உரிமை குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோல், மீள்குடியேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட, தற்போது தனியார் நிறுவனங்களின் வசம் உள்ள அரசாங்கக் காணிகளை விரைவாக விடுவிப்பது குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டதுடன், அக்காணிகளை வழங்குவது தொடர்பாக நிறுவனங்களுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டவுடன் வீட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
‘டித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தியதுடன், சேதமடைந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 21 வீதிகளின் பணிகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுமாறும், மாகாண வீதி அபிவிருத்திக்குத் தேவையான முழுமையான நிதி மதிப்பீடுகளைத் தயாரித்து அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ‘டித்வா’ அனர்த்த நிலைமையினால் வயல் நிலங்கள் மற்றும் பயிர்ச் செய்கைக் நிலங்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் கற்களை அகற்றுவதற்காக ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும், விவசாய அமைப்புகளின் பங்களிப்புடன் அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.




