இலங்கையில் தொடரும் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை குறித்த புதிய வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




